மின்வெட்டை கண்டித்து 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்: கொடிசியா கந்தசாமி
கோவை கொடிசியா வளாகத்தில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட சிறுதொழில் சங்க (கொடிசியா) தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து இது வரை 5,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. மேலும் 5,000 தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது.
கடந்த 6 மாதமாக மின் தடை நேரம் அதிகரித்துள்ளது. சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. ஆனால் கோவையில் மட்டும் தினமும் 8 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பின்பு மின்தடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. மின்வெட்டினால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் மாவட்ட அளவில் ரூ. 250 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
தொழிற்சாலைகளை வெகுநேரம் மூடி வைப்பதால் உற்பத்தி குறைவு ஏற்படுகின்றது. இதனால் தொழிற்சாலை நிர்வாகங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. மின்வெட்டு பிரச்சனை குறித்து தமிழக அரசுக்கு பல முறை தெரிவித்தும், மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மின்தடையை கண்டித்து அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் வரும் 10ம் தேதி கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அன்று கோவை மாவட்டத்தில் உள்ள 40,000 தொழிற்சாலைகள் மூடப்படும். இந்த ஆர்பாட்த்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றார்.