ஸ்டாலின் அலுவலகத்திற்கு பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு: ஹைகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை: கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்காக, பள்ளி கட்டட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே அந்த இடம் சட்ட விரோதமான முறையில் ஸ்டாலின் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்ய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 சட்டப் பேரவை தேர்தல் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்காக ஜவஹர் நகரில் இடம் ஒதுக்கி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 16-ம் தேதி அங்கு எம்.எல்.ஏ. அலுவலகம் திறக்கப்பட்டது.
தீர்மானம் ரத்து
இந் நிலையில் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்காக இடம் ஒதுக்கிய மாநகராட்சி மாமன்றக் கூட்டத் தீர்மானத்தை ரத்து செய்து கடந்த நவம்பர் 8ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கல்வி பயன்பாட்டு நிலம்
இப்போது பிரச்சனைக்கு ஆளாகியுள்ள இடமானது ஜவஹர் நகர் மேம்பாட்டு சங்கத்தால் 1974-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்டது. அந்த இடத்தை கல்வி பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த இடம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் கல்வி பயன்பாட்டுக்காக அந்த இடம் 1974-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்படாததைத் தொடர்ந்து ஜவஹர் நகர் மேம்பாட்டு சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கிடையே அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்காக வகுப்பறைக் கட்டடங்களை கட்டுவது என்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதேபோல் அந்த இடத்தில் சாரணர் இயக்கத்துக்காக கட்டடம் கட்ட வேண்டும் என்று ஒரு முன்மொழிவு மாநகராட்சி ஆணையருக்கு வந்தது.
இந் நிலையில் இந்த வழக்கில் கடந்த 31.1.2001 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பள்ளிக் கட்டடம் தவிர அந்த இடத்தில் சாரணர் இயக்க அலுவலகத்துக்காக கட்டடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அதன்படி அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டன. இருப்பினும் 2011 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் சாரணர் இயக்க கட்டடத்தை எம்.எல்.ஏ. அலுவலகத்துக்காக ஒதுக்குவது என்று 29.6.2011 அன்று மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்ட விரோதமானது
கல்விப் பயன்பாட்டுக்காக தாங்கள் வழங்கிய இடத்தை எம்.எல்.ஏ. அலுவலகத்துக்காக தரக் கூடாது என்று கூறி ஜவஹர் நகர் மேம்பாட்டு சங்கம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தது. மேலும், இவ்வாறு எம்.எல்.ஏ. அலுவலகத்துக்காக இடம் ஒதுக்கியது என்பது 2001-ம் ஆண்டின் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்காக சட்ட விதிகளுக்கு முரணாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்ட விதிகளுக்கு முரணாக மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றினால், அத்தகைய தீர்மானத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அந்த அடிப்படையிலேயே கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பான மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்து 8.11.2011 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை சரியானதே என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.