மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவையே மதிக்காத அதிமுக அரசு- க. அன்பழகன்
சென்னை: நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியார்களை உடனே பணியில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் அரசு அந்த உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் கூட்டம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடந்தது. அதில் திமுக பொதுச் செயலளார் க. அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது,
திமுக தமிழ் மொழி உணர்வையும், திராவிட இன உணர்வையும் அடித்தளமாகக் கொண்டு வளர்க்கப்பட்டது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபடுபவர் கருணாநிதி. தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்தவித நிவாரணமும் வழங்காத நிலையில் அவர்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளை முடுக்கிவட்டவர் கருணாநிதி.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அந்த இடங்களுக்கு அந்த அம்மையார் வந்தார்களா? ஆனால் கருணாநிதியோ உடல் நலக்குறைவால் வண்டியில் வைத்துக் தள்ளிக் கொண்டு போகும் நிலையில் இருந்தும் அதை பொருட்படுத்தாது சென்னையில் இருந்து திருவாரூர் வரை சென்றார். மேலும் வழியிலும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதிமுக அரசு தொடர்ந்து மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. கூண்டோடு நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனே பணியில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் அதிமுக அரசோ அந்த உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது என்றார்.