சங்கரன்கோவிலில் தொடர்ந்து பதற்றம்: கலவரத்தில் 17 பேர் காயம், 19 பேர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நேற்று இரு பிரிவினரிடையே இரண்டாவது நாளாக கல்வீச்சு சம்பவம் நடந்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான வழிபாட்டு தலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு காமராஜர் நகரில் உள்ள ஒரு பிரிவினரும்,காந்திநகரில் உள்ள ஒரு பிரிவினரும் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்.
முதலாவதாக சென்ற காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டு தலம் மீது செருப்பு வீசியதாக கூறி மற்றொரு பிரிவினர் ஆவேசமாக திரண்டனர். அப்போது காந்திநகரைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் இரவு 9 மணியளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முளைப்பாரி ஊர்வலம் வந்தனர். ஊர்வலத்தினர் கழுகுமலை சாலையில் உள்ள வழிபாட்டு தலம் முன் பட்டாசு வெடித்தனர். அப்போது ஆவேசமாக நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினர் ஊர்வலம் வந்தவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்து கீழே விழுந்தார். இதனால் ஆவேசமான மற்றொரு தரப்பினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் தாக்குதல் கலவரமாக மாறியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று சப்-இன்ஸ்பெக்டர்களால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வந்தனர். ஆனாலும் இருதரப்பினரும் நேருக்கு, நேரமாக மோதிக் கொண்டும், கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த 2 கார், 3 ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 5 ஆட்டோ, 2 கார் மற்றும் ஒரு லாரி அடித்து நொறுக்கப்பட்டது.
கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் போதிய போலீசார் இல்லாததால் சுமார் 1 மணிநேரம் வன்முறை கும்பல் வெறியாட்டம் நடத்தியது. இரவு 10 மணியளவில் நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி சம்பவ இடத்திற்கு வந்து வன்முறை கும்பலை கலைந்து போகச் சொல்லி எச்சரிக்கை விடுத்தார். கூட்டம் கலையாததால் இரண்டு கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டது. ஆனாலும் கூட்டம் கலையவில்லை. இதனால்போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது போலீசார் மீது இருதரப்பிலும் இருந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்நிலையில் நேற்று காந்திநகரைச் சேர்ந்தவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடக்கும் காளியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மதியம் 2 மணியளவில் காந்திநகர் சமுதாயக் கூடம் பகுதியில் இருந்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த வழிபாட்டு தலம் மீது கல்வீசப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து மற்றொரு தரப்பினரும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உட்பட 17 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக இரு பிரிவைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையிலும் இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக நேற்றும் பதட்டம் நிலவியது. சங்கரன்கோவிலில் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி. வரதராஜு, ஆர்.டி.ஓ. இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பகுதியிலேயே முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு பிரிவினருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பேச்சுவார்த்தைக்காக ஆர்.டி.ஓ. இளங்கோ, தாசில்தார் தாமோதரன் ஆகியோர் தயாராக இருந்தனர். ஆனால் இருபிரிவினரும் சமாதான பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.