திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரிய கருப்பன், தமிழரசி வீடுகளில் அதிரடி தொடர் ரெய்டு!
திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரிய கருப்பன், தமிழரசி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்தததாக புகார் எழுதந்துள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த 2 பேரின் வீடுகளில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் உள்ள கட்டிடம் மற்றும் அரளிக்கோட்டையில் உள்ள பெரிய கருப்பனின் வீடுகள், பைக்குடிபட்டியில் உள்ள பண்ணை வீடு மற்றும் காரைக்குடியில் உள்ள பிசினஸ் பார்ட்னர் பூரணிநாதன் வீடு, பள்ளத்தூரில் உள்ள மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவியின் வீடு, சென்னை துரைப்பாக்கம், எண்ணூரில் உள்ள உறவினர் வீடுகள், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள அடகுக்கடை, சிவகங்கை மாவட்டம் வேலங்குடி, வேலூர் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கல்குவாரி என மொத்தம் 11 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று மதுரை திருப்பாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் தமிழரசியின் வீட்டில் சோதனை நடந்தது. அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சாந்தகுமாரி என்ற பெண் பெரிய கருப்பன் மீது ரூ. 1.45 கோடி மோசடி புகார் கொடுத்தார். கடந்த 1ம் தேதி தான் முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.