லோடு ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர்
நெல்லை: லோடு ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பரவலாக லோடு ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர். லோடு ஆட்டோக்களில் பயணிகள் ஏற்றிச் செல்வதை கண்காணிக்காமல் போக்குவரத்து துறை அதிகாரிகள் செயல்படுவதால் இந்த விபத்துக்கள் தொடர் கதையாக நடக்கிறது. சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் நேற்று காலையில் நடந்த விபத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் 4 பேர் பலியானார்கள், 16 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த தொடர் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லோடு ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்வதற்கும் கிடுக்கிபிடி போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் செல்வராஜ் கூறியதாவது,
அனுமதி தேவையில்லாத வாகனங்கள் சரக்குகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு அதற்காகவே பதிவுகள் அனுமதிக்கப்படுகிறது. எனினும், பெரும்பான்மையான லோடு ஆட்டோக்கள் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற வாகனங்களில் பயணிக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பாக லோடு ஆட்டோ மற்றும் பயணிகள் வாகனம் தவிர்த்த எந்த வாகனத்திலும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற ஆட்டோ ரிக்ஷாவின் பின்புறம் அமர்ந்து செல்வது பயணிகளின் பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் என்பதால் பயணிகளை இவ்வாறு பயணிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த அறிவிப்புக்கு பின்னர் இத்தகைய பயணங்கள் தொடரும் நிலையில் டிரைவரின் லைசென்ஸ், வாகன அனுமதி, வாகன பதிவு சான்றுகள் ரத்து செய்யப்படுவதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
இது போன்ற பயணிகள் ஆட்டோ ரிக்ஷாக்களிடம் வாகனத்தின் பின் கதவு திறந்து பயணிகளை அமர்த்தி கால்களை தரையில் படும்படி தொங்க வைத்து பாதுகாப்பற்ற முறையில் செல்லும் ஆட்டோக்களின் டிரைவிங் லைசென்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றார்.