அதிமுக அரசின் பெயரைக் கெடுக்க சங்கரன்கோவில் கலவரத்தை திமுக தூண்டியதாக தமுமுக சந்தேகம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் வர இருக்கும் சூழ்நிலையில் ஆளும்கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில், திமுகவினர் திட்டமிட்டு இந்த வன்முறையை தூண்டியதாக தமுமுக சந்தேகப்படுகின்றது.
இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட் கான் நிருபர்களிடம் கூறியதாவது,
சங்கரன்கோவிலில் கடந்த 7ம் தேதி ஒரு பிரிவினர் ஊர்வலமாக சென்றபோது கழுகுமலை ரோட்டில் உள்ள மதவழிபாட்டு தலத்திற்குள் சில விஷமிகள் கற்களை வீசியுள்ளனர். நியாயம் கேட்க சென்ற முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டிலே தலித்துகளும், முஸ்லிம்களும் எப்போதும் ஒற்றுமையாக தான் இருந்து வருகிறார்கள்.
சில இளைஞர்களின் தவறான செயல்களால் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. திமுக பிரமுகர் ஒருவர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்துள்ளார். பின்னர் அவர் புறப்பட்டுவிட்டார். அவர் சென்ற பிறகு தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. 50 கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் முஸ்லிம்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதை ஈடுகட்டும் வகையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் வர இருக்கும் சூழ்நிலையில் ஆளும்கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில், திமுகவினர் திட்டமிட்டு இந்த வன்முறையை தூண்டியதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். வன்முறையைத் தூண்டியவர்கள், ஈடுபட்டவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications