மின்கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் : மதுரையில் கூச்சல் குழப்பம்
மதுரை : மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து மதுரையில் நடைபெற்று வரும் கருத்துக் கேட்புக்கூட்டத்தில் எதிர்ப்பு உருவானது. ஒருசிலர் முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டதால் அதிகாரிகள் கருத்து கேட்ட இயலாத நிலை ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்த்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. இன்று மதுரை பனகல் ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ அரங்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார ஒழுங்கு முறை ஆணைய செயலர் குணசேகரன், உறுப்பினர்கள் வேணுகோபால், நாகலசாமி ஆகியோர் கருத்துக்களை கேட்கவுள்ளனர். காலையில் இருந்தே விவசாய சங்கத்தினர், தொழில் அமைப்பினர், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் என பல தரப்பினர் வந்துள்ளனர்.
கடும் எதிர்ப்பு
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலரும், மின்சாரமே ஒழுங்காக கிடைப்பதில்லை இதில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது எவ்வாறு நியாயம் என்று கேட்டனர். மின் கட்டணத்தை உயர்த்து வதற்கு பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களைள் எழுப்பினர் . இதனால் அங்கு அதிகாரிகள் கருத்து எதுவும் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக அரங்கம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அரங்கத்திற்குள்ளும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மின் கட்டணம் உயர்வு குறித்து தங்களுடைய கருத்துக்களை நேரடியாகவோ, மனுக்கள் மூலமோ அளிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை, கோவை, திருச்சி, என நடந்து முடிந்த கூட்டங்களில் விவசாய அமைப்பினர் மற்றும் பல்வேறு சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். கூச்சல் குழப்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.