நேட்டோ படையினர் வான்வழி தாக்குதல் 8 குழந்தைகள் பலி
கபீஸா: ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய வான் தாக்குதலில் கபீஸா மகாணத்தில் 8 எட்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.
தாலிபான்கள் ஆட்சி காலத்தின்போது ஒசாமா பின் லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க, ஆப்கானிஸ்தான் மீது போர் அறிவித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டன. ஒசாமா கொல்லப்பட்ட பின்னரும் நேட்டோ படையினர் அங்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று ஆப்கானிஸ்தானின் கபீஸா மாகாணத்தின் நெஜ்ராப் மாவட்டத்திலுள்ள கியாவாலா கிராமப்பகுதியில் நேட்டோப்படையினர் திடீர் வான் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக கபீஸா மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதிபர் கண்டனம்
நேட்டோ தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்ட செய்தியினை உறுதிபடுத்திக்கொண்ட கர்சாய், "இது போன்ற தாக்குதல்கள் பல முறை நடந்துள்ளது வருந்தத்தக்கது; கண்டனத்திற்குரியது என்றார். இதுவரை நேட்டோ படையினர் நடத்திய வான்தாக்குதல் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அனுப்பி நேட்டோவிடம் விளக்கம் கேட்க உள்ளோம்" என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேட்டோ படையினரின் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.