மக்கள் மீது அக்கறையில்லை! - காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் மீது பிரதமர் தாக்கு!
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடந்த காங்கிரஸ் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவர் பேசுகையில், " உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு, மின்சார வினியோகம், குடிநீர் வசதி, உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் ஆட்சி கடந்த 22 ஆண்டுகளாக இங்கே நடந்து வந்திருப்பதால்தான் இந்த மோசமான நிலைமை.
காங்கிரஸ் அல்லாத அரசுகள் நிர்வாகத்திலும் சரி, சாமானிய மக்களின் பிரச்னைகளிலும் சரி கவனம் செலுத்தியதில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உத்தரப் பிரதேசம் வளர்ச்சி பெறுவதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். பந்தல்காண்ட் பகுதிக்கு 17000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதில் ராகுல் காந்தி முக்கியப் பங்காற்றினார்.
இந்த நிவாரண திட்டம், பந்தல்காண்ட் பகுதியின் பிற்பட்ட நிலைமையை மாற்றுவதற்காகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை மாநில அரசு முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள வில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வருகின்றன.
விவசாயிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 200 கோடி கடன்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. கோதுமை, நெல், சர்க்கரை ஆகியவற்றின் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் போதுமான உரம் கையிருப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ள போதிலும், விவசாயிகளின் தேவைகள் குறித்து பகுஜன் சமாஜ் அரசு கவனத்தில் கொள்ளாததால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைக்கவில்லை.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்குத்தான் மத்திய அரசு மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தை கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காகத்தான் தேசிய கிராமப்புற மருத்துவ இயக்கத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டங்களும் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்தமட்டில் மாநில அரசு ஒத்துழைக்காத பட்சத்திலும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் செய்துள்ளது.
மாநில அரசுக்கு வழங்கக்கூடிய நிதியின் அளவை 5, 6 மடங்கு பெருக்கி உள்ளோம். 12 ஆயிரம் கிராமங்களை, குக்கிராமங்களை இணைக்கத்தக்க விதத்தில் கிராமப்புற சாலைகளுக்காக பெருமளவில் நிதி வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சாலைகள், நெடுஞ்சாலைகளுக்காகவும் பெருந்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், இந்த மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய நிலைதான் உள்ளது. மான்செஸ்டர் என்று கருதப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கான்பூர் நகரில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. பிற நகரங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. மின்வினியோகம், சாலைகள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் வடிவத்தை மாற்றக்கூடிய ஒரு அரசு தேவை. சாதி, மதம் கடந்து வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தக்கூடிய அரசாக அது அமைய வேண்டும்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியால்தான் அத்தகைய அரசை உருவாக்க முடியும்," என்றார் மன்மோகன் சிங்.