அசாமில் வேரூன்றும் மாவோயிஸ்டுகள்-ப.சிதம்பரம் கவலை
கவுகாத்தி(அசாம்): அசாம் மாநிலத்தில் தனிநாடு கோரி பிரிவினைவாத இயக்கங்கள் போராடி வரும் நிலையில் மாவோயிஸ்டுகளும் வேரூன்றி இருப்பதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் தருண் கோகய், அசாமில் இயங்கி வரும் உல்பா, போடோலாந்து விடுதலை முன்னணி போன்ற இயக்கங்களுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-ன் உதவி குறித்தும் மாவோயிஸ்டுகள் வேரூன்றி இருப்பது தொடர்பாககவும் விவாதிக்கப்பட்டது என்றார்.
இதேபோல் மியான்மர் எல்லைப்பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் தருண் கோகய் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், ராணுவம் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தீவிரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை ஒடுக்குவது தொடர்பாக இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.