பெங்களூர் கோர்ட்டில் சசி கண்ணீர் வாக்குமூலம்..சென்னையில் கணவர் நடராஜன் கைது!
சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடராஜனின் வீட்டிலிருந்து அவரை போலீஸார் அள்ளிச் சென்றனர். இரவோடு இரவாக நடராஜனை தஞ்சாவூருக்குக் கொண்டு சென்று விட்டது போலீஸ்.
சசிகலா குடும்பத்திலிருந்து கைதாகும் மூன்றாவது நபர் நடராஜன் ஆவார். இதற்கு முன்பு சசிகலாவின் தம்பி திவாகரன், சித்தப்பா மருமகன் ராவணன் ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் நடராஜனுக்கும் சிறைக் கம்பிகளைக் காட்டியுள்ளது தமிழக காவல்துறை.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கட்சியை விட்டும், போயஸ் தோட்ட இல்லத்தை வீட்டும் துரத்தப்பட்டனர். அதன் பின்னர் அவர்களில் பலர் மீது மிரட்டல், கொலை முயற்சி, பண மோசடி என பல புகார்கள் பாய்ந்தவண்ணம் உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷியூர் பாலசுப்ரமணியத்தின் மனைவி கஸ்தூரியின் வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் முதலில் கைதானார். பின்னர் மணல் குவாரி குத்தகை எடுத்துத் தருவதாக கூறி ரூ. 1 கோடி மோசடி செய்ததாக ராவணன் கைதானார். அவர் மீது இதுவரை 3 வழக்குகள் பாய்ந்துள்ளன. இந்த இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் சசிகலா குடும்பத்தின் பிதாமகராக கருதப்படும் நடராஜனை நேற்று போலீஸார் தூக்கி விட்டனர். புதிய பார்வை இதழின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார் நடராஜன்.
நேற்று இரவு 7 மணி அளவில், பெசன்ட்நகர் வீட்டுக்கு தஞ்சாவூர் போலீஸ் டீம் வந்தது. அப்போது நடராஜன் வீட்டில் இருந்தார். அவரிடம் நில அபகரிப்பு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், ஸ்டேஷனுக்கு வாருங்கள் என்று போலீஸார் கூறினர். இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நடராஜன், குளித்து விட்டு வருவதாக கூறினார். போலீஸார் அனுமதிக்கவே குளித்து விட்டு டிரஸ் செய்து கொண்டு போலீஸாருடன் கிளம்பினார் நடராஜன்.
அதன் பின்னர் நடராஜனை போலீஸார் கைது செய்த விவரம் வெளியானது.
எதற்காக இந்த கைது...?
தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இவர் நேற்று தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில்,
தஞ்சை வட்டம் விளார் கிராமத்தில் பைபாஸ் ரோடு அருகே எனக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுரஅடி நிலத்தை சசிகலா கணவர் எம்.நடராஜன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அபகரித்து கொட்டகை போட்டு உள்ளார். அதை கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து எனது சொத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
விளார்தான் நடராஜனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. புகாரைப் பெற்ற போலீஸார் நடவடிக்கைக்கு ஆயத்தமானார்கள். அதன்படியே டிஎஸ்பி மாணிக்கவாசகம், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீஸார் சென்னை வந்து நடராஜனைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நடராஜனை உடனடியாக தஞ்சைக்குக் கொண்டு சென்று விட்டனர்.
நடராஜனே கைதாகியுள்ளதால் சசிகலா ஆடிப் போயுள்ளதாக தெரிகிறது. மேலும் அடுத்து யார் கைதாகப் போகிறார்கள் என்ற பெரும் பீதியிலும் சசிகலா குடும்பத்தினர் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.