கல்யாணம் திருமணமானது எப்போது?.. கருணாநிதி தரும் சுவாரஸ்ய தகவல்!
திருச்சி: திராவிட இயக்கம் வளர்ந்த பிறகுதான், கல்யாணம் என்ற சொல் மாறி திருமணம் என்று மாறியது, ஆசிர்வாதம் என்பது மாறி வாழ்த்து என்ற சொல் வந்தது என்ற சுவாரஸ்ய தகவலைக் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் மற்றும் தீபிகாவின் திருமணம் இன்று திருச்சியில் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் திருமண விழாவி்ல் அவர் ஆற்றிய உரையில் அருமையான தகவல்கள் பல இடம் பெற்றிருந்தன.
கருணாநிதியின் பேச்சு...
திருச்சி மாவட்ட கழக செயலாளர் நேருவின் மகன் அருண்-தீபிகா திருமணத்தில் காலையில் இருந்தே கட்சித் தலைவர்களும், நண்பர்களும் வாழ்த்தினார்கள். அவர்கள் வாழ்த்தோடு எனது வாழ்த்தையும் இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
நேருவை பலர் புகழ்ந்து பேசினார்கள். நானும் அவ்வாறு பேசுவது என் தம்பிகளை புகழ்வது போன்றது. நேருவும் என் தம்பிகளில் ஒருவர் ஆவார்.
திருச்சி மண்ணிற்கு பல்வேறு பெருமைகள் உண்டு. மண்ணில் தான் எனது அரசியல் வாழ்விற்கு விதை போடப்பட்டது. திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.
இந்த மாவட்டத்தில் இருந்த குளித்தலை தொகுதியில் தான் நான் முதன் முதலில் தி.மு.க. வேட்பாளராக நின்று வெற்றி பெற்றேன். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளேன்.
தி.மு.க.வின் வளர்ச்சி, வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை காண அடியெடுத்து கொடுத்தது திருச்சியில் நடந்த மாநாடு தான். தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா என வாக்கெடுப்பு நடந்ததே இந்த மண்ணில்தான்.
அதன்படிதான் 1957-ம் ஆண்டு தேர்தலில் குளித்தலையில் போட்டியிட்டேன். 5 முறை நான் முதல்வராக ஆகிவிட்டேன். ஆனால் 6-வது முறையும் முதல்வர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் நேரு குடும்பத்தில் 6-வது திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது 6-வது முறை நான் முதல்வராக வருவதை விட இதில் மகிழ்ச்சியடைகிறேன்.
6-வது முறை முதல்-அமைச்சர் என்பது வாக்காளர்களுக்கு மத்தியில் பெருகின்ற வெற்றி. அது அரசியல் வெற்றி. ஆனால் இந்த திருமண விழா லட்சியவாதிகள் மத்தியில் கிடைக்கின்ற கொள்கை வெற்றி.
எந்த திருமணம் ஆனாலும் அதை அறநெறிக்கண்ணோடு, பகுத்தறிவோடு, பழைய பண்பாட்டு நெறியோடு நடைபெறும் திருமணமா என்று தான் பார்க்க வேண்டும்.
திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தான் கல்யாணம் என்பது திருமணம் ஆனது. மணமக்களை ஆசீர்வதிப்பது என்பது வாழ்த்துக்களாக மாறியது. திராவிட இயக்கத்தால், பெரியாரால், அண்ணாவால் வழிகாட்டப்பட்ட நெறிமுறை களைத்தான் திராவிட இயக்கம் கொண்டாட வேண்டும்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வளர்த்த தமிழை செந்தமிழாக மாற்றியுள்ள நிலையில் அதை அழித்துவிட நினைக்கும் ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் நாம் அவர்களை வீழ்த்த வேண்டும். அந்த வகையில் நேற்று மந்திரி, இன்று சிறை என்று இருந்தாலும் திராவிட கொள்கையிலும், கழகத்தை கட்டி காப்பதிலும் உறுதி கொண்டிருக்கும் நேருவைப் போல மணமக்கள் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, கொள்கை ஆகியவற்றை காத்து வாழ வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications