சங்கரன்கோவில் பிரசாரம்-மேலும் 6 அமைச்சர்களை களத்தில் இறக்கினார் ஜெயலலிதா
புதிய சேர்க்கையின் மூலம் சங்கரன்தொகுதியில் அதி்முக சார்பில் தேர்தல் பணிகளைப் பார்வையிட அமைக்கப்பட்டுள்ள குழுவின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று ஜெயலிதா வெளியிட்ட அறிக்கையில்,
18.3.2012 அன்று நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள 34 பேர்களுடன்,
உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், பால்வளத் துறை அமைச்சர் வி.மூர்த்தி, மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ.முகம்மத்ஜான், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, அமைப்பு செயலாளர் செ.செம்மலை ஆகியோர் கூடுதலாக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கு முதல் ஆளாக அதிமுகதான் வேட்பாளர் பெயரை அறிவித்தது. அதிமுக வேட்பாளர் முத்துச் செல்வியும் முதல் நபராக பிரசாரத்தைத் தொடங்கினார். அதேபோல பிரசாரக் குழுவையும் ஜெயலலிதாதான் முதலில் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று தேமுதிக வேட்பாளரை அக்கட்சி அறிவித்தது.
இத்தேர்தலில் திமுகவும், தேமுதிகவும் மறைமுகமாக ஒருங்கிணைந்து செயல்படும் என்று பேச்சு அடிபடுகிறது. எனவேதான் அதை முறியடிக்க தனது பணிக்குழுவின் எண்ணிக்கையை ஜெயலலிதா பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.