ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டில் -30 டிகிரி செல்சியஸ் குளிரில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்த காருக்குள் கடந்த 2 மாதங்களாக இருந்த நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் ஸ்கைல்பர்க்(44). அவர் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி வடக்கு ஸ்வீடனில் உள்ள காட்டுப்பகுதி வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் பனிக்கட்டிகளில் சிக்கி நின்றது. ஆள்நடமாட்டமில்லாத பகுதி என்பதால் அவரது உதவிக்கு யாரும் வரவில்லை. இதையடுத்து அவர் காரில் சிக்கிக் கொண்டார்.
அங்கு கடும்பனிப்பொழிவு உள்ளதால் அவரது கார் முழுவதும் பனியால் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பனிக்கட்டிகளை சாலைகளில் இருந்து அகற்றுபவர்கள் பீட்டரின் காரில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றினர். அப்போது காரின் பின்சீட்டில் யாரோ இருப்பது கண்டு அதிர்ந்தனர். பாதி மயக்கத்தில் இருந்த அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பீட்டர் கடந்த 2 மாதங்களாக உணவின்றி உருகும் பனிக்கட்டியை குடித்து வாழ்ந்துள்ளார். அவர் உணவின்றி கடுங்குளிரில் உயிர் பிழைத்ததே பெரிய அதிசயம் என்கின்றனர் மருத்துவர்கள்.