ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரூ.3 கோடி வைரக்கற்கள் கடத்தியவர் பிடிபட்டார்
சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள வைரக்கற்களை கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளிடம் பிடிப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று மாலையில் துபாயில் இருந்து ஹைதராபாத் வழியாக சென்னைக்கு வந்த விமானம் தரையிறங்கியது. இதில் வந்த பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது குஜராஜ் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த அரவிந்த் லால்வாணி(38) என்பவரின் சூட்கேசில் சந்தேகத்திற்கு இடமான ஒரு பார்சலை அதிகாரிகள் கண்டெடுத்தனர். பார்சலை சுங்க இலாகா அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் 750 கேரட் கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான வைரக்கற்கள் இருந்தது.
இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், சூரத்தில் உள்ள வைரக்கற்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தான் வேலை செய்வதாகவும், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தன்னிடம் இருந்த வைரக்கற்களில் சிலவற்றை ஹைதராபாத்தில் விற்றுவிட்டு, மீதமுள்ளவற்றை சென்னையில் விற்பதற்காக கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
அரவிந்த் லால்வாணியின் விமான டிக்கெட், போர்டிங் பாஸ் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் சோதித்தனர். அப்போது அவர் கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து உள்நாட்டு முனையத்தில் இருந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் கொண்டு வந்த வைரக்கற்கள் எவ்வளவு? சென்னையில் அவர் யாரிடம் விற்க வந்தார்? வைரக்கற்களுக்கு வருமான சான்றுகள் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications