அமைதியாக காரியம் சாதிக்கும் விஜய்.. திமுக, அதிமுக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவெகவிற்கு சாதகமாகிறதா?
சென்னை: தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், தனிப்பெரும் கட்சியாக தவெக உள்ளது. ஆனால் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாத ஆளுநரின் முடிவினை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாமே கண்டித்துள்ளன. ஆனால் விஜய் இதுபற்றி வாய் திறக்கவில்லை.. விஜய் மிகவும் அமைதியாகவே இருக்கிறார். இதற்கு கூட விஜய் வாய் திறக்க மறுக்கிறார்.. இவர் எப்படி மத்திய அரசை எதிர்ப்பார் என்று திமுக கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதேநேரம் திமுக, அதிமுக இணைந்து கூட்டணி அமைக்க போவதாக வெளியான செய்திகள் தமிழகத்தை ஆடிப்போக வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுகவினர் செய்யும் ஒவ்வொரு செயலும் தவெகவிற்கு சாதகமாகவே முடியும் என்கிறார்கள்.
மங்காத்தா படத்தில் வில்லனாக இருக்கும் அஜித் போலீஸாக இருக்கும் அர்ஜுன் கடைசியில் ஒன்றாக சேருவார்கள்.. அப்படியான அரசியலை நோக்கி தமிழகம் போகிறது என்று முன்னணி ஊடகவியலாளர்கள், முன்னணி ஊடகங்கள், ஆங்கில ஊடகங்கள் அடுத்தடுத்து செய்திகளை வெளியிட்டன. இதனை முதல் ஆளாக வந்து திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்தார்.

ஆட்டம் மாறியது
தவெக ஆட்சியமைக்க எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று கூறினார். ஆனால் ஆட்டம் அதன்பின்னரே மாறியது. மாறி மாறி ஊடகங்களில் சத்தியம் செய்யாத குறையாக செய்திகள் வரத்தொடங்கின. ஒருகட்டத்தில் திமுக, அதிமுக தலைகள், நாங்கள் பங்காளிகள் தான்.. கூட்டணி வைத்தால் என்ன தவறு என்கிற ரீதியில் பேச தொடங்கினார்கள். இது தமிழகத்தையே ஆடிப்போக வைத்துள்ளது.
தவெகவிற்கு சாதகம்
இப்படியான ஒரு முடிவினை திமுக, அதிமுக சேர்ந்து எடுத்தால், அது தவெகவிற்கு தான் சாதகமாக முடியும் என்கிற நிலையில், யார் இப்படியான புரளிகளை கிளப்புவது சரியா என்றே பல்வேறு திமுக ஆதரவாளர்கள் பேச தொடங்கினார்கள். ஏனெனில் அவர்களே இதனை நம்பவில்லை.. அதிமுகவினருமே இதனை நம்பவில்லை.. ஆனால் நேற்று மாலை முதல் நடப்பதை பார்த்தால், அப்படி மாறுமோ என்ற அச்சம் தவெகவிற்கு வந்துள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் அதிமுக, திமுகவில் இருந்து கிரீன் சிக்னல் வர ஆரம்பித்துள்ளன.
60 ஆண்டுகளுக்கு பிறகு அமைகிறது
இன்று எல்லோருடைய பார்வையும், விசிக, இடதுசாரிகள் முடிவு என்ன என்பதில் தான் இருக்கிறது. அவர்கள் ஒருவேளை தவெகவிற்கு ஆதரவு தந்தால், முதல்முறையாக திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அமையும். விசிக, இடதுசாரிகள் முடிவினை பொறுத்து அதிமுக, திமுக அடுத்த கட்ட முடிவினை எடுக்கும் என்கிறார்கள். என்ன முடிவு என்றால், இருவரும் சேர்ந்து ஆட்சியமைப்பதுதான்.
ஊடகங்கள் செய்தி
ஸ்டாலின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்றும், அல்லது எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஸ்டாலின் வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்றும் சொல்கிறார்கள். அப்படியான ஒரு முடிவு நடக்கப்போவதாகவே கிட்டத்தட்ட ஊடகங்கள் தலைப்பு செய்தியாகவே வெளியிட்டு வருகின்றன. இதனை முதலில் மறுத்த கழகஙகளின் நிர்வாகிகள் சிலர், இப்போது அப்படி நடந்தால் என்ன என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விஜய் ஆதரவாளர்கள் திட்டம்
இதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதனை வைத்து விஜய் ஆதரவாளர்கள், தவெக ஆதரவாளர்கள் பாருங்கள், எங்கள் தலைவர் அன்றே சொன்னார்.. இவர்களின் குணம் இதுதான் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இன்ஸ்டாவில் புதிய தலைமுறை வாக்காளர்கள் நடப்பதை எல்லாம் பார்த்து திமுக, அதிமுகவை திட்டி தீர்க்கிறார்கள்.
சாதிக்கும் விஜய்
தவெக எதிர்பார்த்தது போலவே நடப்பதாகவே தெரிகிறது. தவெக மெஜாரிட்டியுடன் வந்து ஆட்சி சரியில்லை என்று அவரை அம்பலப்படுத்துவதற்கு பதில், அதிமுக திமுக ஒன்று சேருவது.. இருவருக்குமே அது சவக்குழியாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். கெஜ்ரிவால் பாணியில் அடுத்த 10 வருடம் விஜய்யை அசைக்க முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். மக்கள் மத்தியில் விஜய்க்கு அனுதாப அலை அதிரிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். இதனை எல்லாம் அமைதியாக இருந்து விஜய் வேடிக்கை மட்டும் பார்க்கிறார். அத்துடன் அமைதியாக இருந்து விஜய் காரியம் சாதிப்பதாகவே கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications