சங்கரன்கோவிலுக்கு மட்டும் தடையில்லா மின்விநியோகம்: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்
சென்னை: சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள சங்கரன்கோவிலில் தடையில்லா மின்விநியோகம் செய்து சலுகை காட்டப்படுகிறதா என்று தமிழக மின்வாரியத்திடம், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று வரை குறைந்தது 8 மணி நேரம் முதல் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருந்தது. ஆனால் சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும் மின்வெட்டே இல்லை என்று தகவல்கள் வெளியாகின. மிகவும் குறைந்த அளவாக 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
வாக்காளர்களைக் கவருவதற்காகவே இந்த சிறப்புச் சலுகையை அரசு தருவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வந்தன.
இதையடுத்து தமிழக மின்வாரியத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அமலாகும் மின்வெட்டின் அளவோடு சங்கரன்கோவில் மின்வெட்டின் அளவு,தன்மை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்று முதல் சென்னை தவிர்த்த தமிழகத்தின் இதர பகுதிகளில் தினசரி மின்வெட்டின் அளவு 4 மணி நேரமாக குறைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு 2 மணி நேரமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது.