சென்னை, கோவையையடுத்து ஈரோட்டுக்கு வரும் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் எந்திரம்
ஈரோடு: சென்னை, கோவை நகரங்களுக்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் தானியங்கி எந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து மின் மண்டல தலைமை பொறியாளர் வி.மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானியங்கி எந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை இதற்கு முன்பு சென்னை மற்றும் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தலா 8 இடங்களில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் எந்திரம் நிறுவப்பட உள்ளது.
இந்த எந்திரம் மூலம் நுகர்வோர் பணமாகவோ, காசோலையாகவோ (செக்), வங்கி வரையோலை(டி.டி) யாகவோ கட்டணத்தை செலுத்தலாம். இந்த எந்திரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படும்.
தானியங்கி எந்திரம் தற்போது மின்வாரிய அலுவலகத்திலும், விரைவில் ஈரோடு பேருந்து நிலையம், கொல்லம்பாளையம், லோட்டஸ் மருத்துவமனை, வீரப்பன் சத்திரம், பஜார், திண்டல் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட உள்ளது.
தானியங்கி சேவைக்கு மின் கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. மேலும் இந்த சேவை விடுமுறை இல்லாமல் இயங்கும். வீடுகளில் மின் கட்டண ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
தானியங்கி எந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை மட்டுமே செலுத்த முடியும். சில்லரை நாணயங்களை செலுத்த முடியாது. செக் மற்றும் டி.டி. மூலம் பணம் செலுத்துவோர் அதன் பின்பக்கம் தங்கள் செல்போன் நம்பரை குறிப்பிட வேண்டும். தானியங்கி எந்திரத்தில் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது என்றார்.