இந்த ஆண்டு 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும்: கபில் சிபல்
பார்சிலோனா: இந்த ஆண்டு இறுதியில் 4ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் விடப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவில் நடந்து கொண்டிருக்கும் உலக மொபைல் காங்கிரஸில் மத்திய அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டுள்ளார். அப்போது இந்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்திய தின நிகழ்ச்சியின்போது பேசிய சிபல் கூறியதாவது,
இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் 4ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விடவிருக்கிறோம். அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு எங்களிடம் போதுமான ஸ்பெக்ட்ரம் உள்ளது. அனைத்து ஆபரேட்டர்களுக்கும் கொடுக்கும் அளவுக்கு போதிய ரேடியோ அலைகள் அரசிடம் உள்ளது.
இருக்கும் ஸ்பெக்டரம் முழுவதையும் ஒரே மூச்சில் ஏலத்தில் விடுவோம் என்று எனக்கு தோன்றவில்லை. இருப்பினும் இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைப்படி தான் இறுதி முடிவு எடுக்கப்படும். இது தவிர அரசு வசம் உள்ள 2ஜி ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விடுகிறோம். ஆனால் இந்த ஏலம் என்று நடக்கும் என்பதை இனி தான் முடிவு செய்ய வேண்டும்.
ஏலத்தில் விடுவதற்கான செயல்முறைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications