வேளச்சேரி என்கவுண்டர்- போலீஸாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை
சென்னை: சென்னை வேளச்சேரியில் கொள்ளையர்கள் ஐவரை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில் அதில் ஈடுபட்ட போலீஸார் 14 பேரிடமும் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் தனித் தனியாக விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை வேளச்சேரியில் வட மாநிலக் கொள்ளையர்கள் ஐவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நேற்று டிஎஸ்பி வெங்கட்ராகவன் தலைமையிலான போலீஸ் குழு சம்பவம் நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தது.
வீட்டில் உள்ள அறைகள், கொள்ளையர்கள் சுட்ட இடம், கொள்ளையர்களை போலீஸார் சுட்ட இடம் உள்ளிட்டவற்றை அவர்கள் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு 2 மணி நேரம் நடந்தது. இன்றும் ஆய்வு தொடர்கிறது.
இன்றைய ஆய்வின்போது தடயவியல் நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் போலீஸார் பயன்படுத்திய மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், என்கவுண்டர் சம்பவத்தில் ஈடுபட்ட துணை ஆணையர் சுதாகர் தலைமையிலான போலீஸ் படையினரையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர். ஒவ்வொருவரும் தனித் தனியாக விசாரிக்கப்படவுள்ளனர். மொத்தம் உள்ள 14 பேரும் இன்று விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் 2 பேர் உதவி ஆணையர்கள், 4 பேர் இன்ஸ்பெக்டர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications