கூடங்குளம் போராட்டத்துக்கு நிதி...4 தொண்டு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு-வங்கிக் கணக்கு முடக்கம்
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கு நிதியுதவி செய்ததாக 4 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக குற்றப் பிரிவு போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான்கு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவில் உதவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இதுகுறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். சமீபத்தில் பிரதமரே இந்தக் குற்றச்சாட்டை வைத்தார். அவர் ஒரு படி மேலே போய், அமெரிக்காவிலிருந்து நிதியுதவி வருவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாகர்கோவிலில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சோன்டெக் ரெய்னர் ஹெர்மன் என்ற ஜெர்மனி நாட்டுக்காரர், போராட்டக் குழுத் தலைவர் உதயகுமாருடன் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பில் இருந்ததும் உறுதியானது. இதையடுத்து ஹெர்மன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி அளித்ததாக, 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ.யும், தமிழக குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து உள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று மாலையில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து பண உதவி பெற்று வரும் 4 தன்னார்வ அமைப்புகள், அந்த பணத்தை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு கொடுத்து உள்ளன. இதுபற்றி மத்திய உள்துறை தீவிர விசாரணை நடத்தியது.
இதைத்தொடர்ந்து அந்த 4 தன்னார்வ அமைப்புகள் மீதும் மத்திய சி.பி.ஐ. போலீசார் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக அந்த தொண்டு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழக குற்றபிரிவு போலீசாரும் இதேபோல் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.
இந்த முறைகேட்டை தொடர்ந்து, மேலும் அந்த நிறுவனங்கள் போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் வகையில், அந்த 4 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன என்று சிங் தெரிவித்தார்.
இதற்கிடையை கைது செய்யப்பட்ட ஜெர்மனிக்காரர் ஹெர்மன் நேற்று ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த அவர் விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்தார். மேலும் கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கும் உதவி வந்தார். மேலும் அவர் நாகர்கோவில் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு உதவுவதற்காக அவர் வந்து தங்கியிருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.