நாடு கடத்தப்பட்ட ஜெர்மனிக்காரர் எந்த பண உதவியும் செய்யவில்லை-'கூடங்குளம்' உதயகுமார்
நிருபர்களிடம் அவர் பேசுகையில், நாகர்கோவிலில் ஜெர்மனிக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதையும் பத்திரிகை வாயிலாக அறிந்தேன். கைது செய்யப்பட்ட ரெய்னரை கடந்த நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விஞ்ஞானி லால் மோகனுக்கும் எனக்கும் தெரியும்.
அவர் ஜெர்மனியில் கணினித் துறையில் பணிபுரிந்தவர். உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று கலாசாரங்களை படித்து வருபவர். நல்ல மனிதர். எளிமையானவர். அவரை எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்திருக்கிறேன். எனது பள்ளி ஆண்டு விழாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.
ஆனால், அவருக்கும், எங்களது போராட்டத்துக்கும் எள் அளவும் தொடர்பு கிடையாது. அவர் போராட்டத்துக்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. நான் பணத்துக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ போராடவில்லை. நான் அரசியல்வாதி அல்ல. எம்.எல்.ஏ. ஆவதற்கோ, எம்.பி. ஆவதற்கோ இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை.
என் தாத்தா, பாட்டி ஆகியோர் புற்றுநோயால் இறந்து போனார்கள். குமரி மாவட்டம் முழுவதும் புற்றுநோய் பரவி வருகிறது. இந்த பேரழிவு நமது குழந்தைகளுக்கும் வந்த விடக்கூடாது என்றுதான் போராடுகிறேன்.
நானும், என் மனைவியும் வெளிநாட்டில் பணிபுரிந்து பணம் சம்பாதித்துள்ளோம். எங்களது தேவைக்கு பணம் உள்ளது.
பழவிளை காமராஜ் பாலிடெக்னிக் பின்புறம் எங்களது பள்ளிக்கு 3 ஏக்கர் 76 சென்ட் இடம் உள்ளது. தோவாளை தாலுகா அழகியபாண்டிபுரத்தில் 9 ஏக்கர் 43 சென்ட் நிலம் உள்ளது. இதை நானும், என் மனைவியும் அமெரிக்காவில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் 15 ஆண்டுக்கு முன்பு வாங்கினோம்.
மேலும், பறக்கையில் 10 சென்ட் பரப்பில் தந்தை வீடும், நாகர்கோவில் தட்டான்விளையில் 15 சென்ட் பரப்பில் தாயார் வீடும், திருப்பதிசாரத்தில் 8 சென்ட் நாற்றங்காலும் உள்ளது. இது தவிர வேறு சொத்தும் எனக்கு இல்லை.
எங்களது போராட்டச் செலவுக்கான பணத்தை மக்கள்தான் நன்கொடையாக தருகிறார்கள். மீனவ கிராமங்களில் தெரிப்பு' என்று சொல்லப்படும் மீனவர்களின் 10 சதவீத சேமிப்பு பணம் எங்களுக்கு வழங்கப்படுகிறது. கூடங்குளம் கிராம மக்கள் பீடிச்சுற்றி கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை வழங்குகிறார்கள். தொண்டு நிறுவனங்களுக்கு இதில் பங்களிப்பு இல்லை. மதம் சார்ந்த எந்த நிறுவனத்திடம் இருந்தும் பணம் பெறவில்லை.
இதுதவிர எங்கள் நகைகள் பலவற்றை வங்கிகளில் அடகு வைத்து தான் போராட்டத்தை நடத்துகிறேன்.
இடிந்தகரை உண்ணாவிரதத்தில் தண்ணீர் மட்டும்தான் உள்ளது. அங்கு மக்களுக்கு பணமோ, மதுவோ கொடுப்பது இல்லை.
நான் எந்நேரமும் கொல்லப்படலாம். துப்பாக்கியால் சுடப்படலாம் அல்லது விபத்தில் கொல்லப்படலாம். போராட்டம் தொடங்கியநாளில் இருந்து இதுவரை இதை எதிர்பார்த்துத்தான் வருகிறேன். கூடங்குளம் அணு உலையில் விபத்து நடந்தால் நாகர்கோவில் வரையுள்ள 15 லட்சம் மக்கள் 2 மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசால் இது முடியுமா?
போபால் விஷவாயு கசிவு விஷயத்தில் ஆன்டர்சன் எப்படி பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாரோ, அதைப்போல அணு உலையைச் சேர்ந்த ரஷியாக்காரர்கள் சென்றுவிடுவார்கள். நாம்தான் தெருவில் நிற்போம்.
இதையெல்லாம் மீறி மத்திய அரசும், மாநில அரசும் கைகோர்க்க எத்தணித்தால் எங்கள் மக்கள் வன்முறையை நாடாமல் உடல்களை ஆயுதமாக்கி சாத்வீக முறையில் போராடுவோம். உடலையும், உயிரையும் பணயம் வைத்து போராடுவோம் என்றார்.