சங்கரன்கோவில் இடைத் தேர்தல்- மொத்தம் 40 பேர் மனு தாக்கல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. மொத்தம் 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மார்ச் 18-ந் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை அதிமுக சார்பில் முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவஹர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாஜக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார்.அவர் இன்று மனு தாக்கல் செய்தார். மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அவர் மனு தாக்கல் செய்தார்.
இன்று மட்டும் பல்வேறு சுயேச்சைகள் உள்பட 18 பேர் மனு தாக்கல் செய்தனர். 3 மணிக்கு முன்பே வந்து விட்ட சிலருக்கு டோக்கன் கொடுத்து உட்கார வைத்துள்ளனர். அவர்களும் தாக்கல் செய்த பின்னர் தான் மொத்தம் எத்தனை பேர் மனு செய்துள்ளனர் என்பது தெரிய வரும். வேட்பு மனு தாக்கல் முடிவடைந்ததாக அதிகாரிகள் அறிவித்தபோது மொத்தம் 40 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் அரசியல் கட்சிகளின் டம்மி வேட்பாளர்களும் அடக்கம்.
நாளை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனுக்ள் பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் 3ம் தேதிக்குள் அதைச் செய்யலாம்.
மார்ச் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 21ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும்.
வேட்பு மனுத் தாக்கல் முடிவதையொட்டி தலைவர்களின் பிரசாரம் சூடு பிடிக்கவுள்ளது. ஏற்கனவே வைகோ சங்கரன்கோவில் தொகுதியில் சில சுற்று பிரசாரத்தை முடித்துள்ளார். அமைச்சர்கள் படை தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகிறது. விரைவில் முதல்வர் ஜெயலலிதா தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் வருகிறார். விஜயகாந்த்தும் கூட பிரசாரம் செய்யவுள்ளார். அவரது மனைவி பிரேமலதாவும்,மச்சான் சுதீஷும் கூட பிரசாரத்தில் குதிக்கவுள்ளனர். இதனால் வரும் நாட்களில் சங்கரன்கோவில் திருவிழாக் கோலம் பூணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.