பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு
சென்னை: பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்க முடிவு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமக தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் மின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்குவதற்கு கடந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழகம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.
இதை சீர்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் வெளிப்பாடாக பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் தமிழக அரசு பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குதல், 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற நல்ல பல திட்டங்களை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
பள்ளி இறுதித் தேர்வு நெருங்கும் நிலையில் மின்பற்றாக்குறை காரணமாக மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு அமர்த்தி அதற்கு உண்டான டீசல் உள்பட அனைத்து செலவுகளையும் வழங்குவதோடு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் வாடகைக்கு ஜெனரேட்டர்கள் எடுத்தால் அதற்குண்டான கூடுதல் செலவுகளை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.