எம்.ஜி.ஆரின் சமையல்காரர் மனைவி, மகளை கடத்திய செல்லூர் எஸ்.ஐ. கைது
மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமையல்காரராக இருந்தவரின் மனைவி மற்றும் மகளைக் கடத்திய செல்லூர் எஸ்.ஐ. பெருமாள்ராஜ் கைது செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமையல்காரராக இருந்த வாய் பேச முடியாத சின்னத்துரை( எ) துரை (68) நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் எம்.ஜி.ஆரின் சமையல் உதவியாளராக இருந்தேன். அவர் மறைவிற்கு பின் நான் மதுரை உத்தங்குடியில் ஒரு கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தேன்.
அங்கு அடிக்கடி வந்து சென்ற செல்லூர் எஸ்.ஐ. (பெருமாள்ராஜ்) வேலைக்காக என்னை அழைத்துச் செல்வார். என் வீட்டிற்கு அவர் வந்தபோது என் மனைவி காளீஸ்வரியுடன் தொடர்பு ஏற்பட்டது. எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர், தென் மண்டல ஐ.ஜி.யிடம் புகார் அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. காளீஸ்வரியை எஸ்.ஐ. கடத்திச் சென்றார். பின்பு 2 போலீஸ்காரர்களுடன் வந்து எனது 11 வயது மகளை எஸ்.ஐ. கடத்தினார்.
அப்போது எஸ்.ஐ. தாக்கியதில் எனது பற்கள் உடைந்தன. நான் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. என் மகளின் எதிர்காலம் கருதி அவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமி ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது,
சிறுமியின் விருப்பப்படி அவர் தனது தந்தையுடன் செல்லலாம். மனுதாரருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுவதால் அவர் வீட்டை அடையும் வரை பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதன் பிறகும் தேவைப்பட்டால் அவர் பாதுகாப்பு கோரி ஐ.ஜி.யிடம் மனு கொடுக்கலாம். அந்த மனுவை பரிசீலித்து ஐஜி நடவடிக்கை எடுக்கலாம். இந்த மனு பைசல் செய்யப்படுகிறது என்றனர்.
முன்னதாக சின்னத்துரை கடந்த 14ம் தேதி எஸ்.ஐ.பெருமாள்ராஜ் மீது ஐஜி ராஜேஷ் தாஸிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 2009ம் ஆண்டு முதல் எஸ்.ஐ.பெருமாள்ராஜ் எனது மனைவி காளீஸ்வரியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதை தட்டிக்கேட்ட போது தாக்கப்பட்டேன். எஸ்.ஐ. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் எஸ்.ஐ. இந்த புகாரை மறுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருமாள்ராஜ் தான் வேலை பார்க்கும் செல்லூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 324, 325 (காயம் விளைவித்தல்), 448 (வீட்டில் அத்துமீறி நுழைதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்ய கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.