ராஜ்யசபாவில் அதிமுக, இ.கம்யூ கொண்டு வந்த தீர்மானம் படுகேவலமான தோல்வி!
டெல்லி: ஜனாதிபதி உரையில் இலங்கை விவகாரத்தைச் சேர்க்கக் கோரி ராஜ்யசபாவில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை கொண்டு வந்த தீர்மானம் படுதோல்வியைத் தழுவியது.
இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக பங்கேற்கவில்லை.
வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 6 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாயின.
ஜனாதிபதி உரையில் இலங்கை விவகாரத்தை சேர்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் எம்பியான டி. ராஜா, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோர் சார்பில் 6 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
ராஜா கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஜனாதிபதி உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அந்தத் திருத்தங்களை உரையில் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து ராஜா பேசுகையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், அதைத் தெளிவாக குறிப்பிடாமல், ...இருந்தால்... ஆனால்... என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றார்.
அதிமுக எம்பி மைத்ரேயன் கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களை அந்நாட்டுப் படைகளிடம் இருந்து பாதுகாக்கத் தவறியது, இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுத் திட்டங்களைத் தெளிவுபடுத்துவது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது பற்றி குறிப்பிடவில்லை என்பதால் அவற்றை ஜனாதிபதி உரையில் சேர்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அப்போது காங்கிரஸ் எம்பியும் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஞானதேசிகன், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்தி விட்டார். இதனால், அதிமுக, சிபிஐ கொண்டு வரும் தீர்மானம் தேவையற்றது என்றார்.
ஓட்டெடுப்பை தவிர்க்க முயன்ற திமுக:
அவரை ஆதரித்து திமுக எம்பி திருச்சி சிவா பேசினார். அவர் கூறுகையில், பிரதமரின் பதில் திருப்தியாக உள்ளது. மிகவும் நுட்பமான இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பினால், எந்த நோக்கத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருகிறோமோ அது பலனளிக்காமல் போய் விடும்.
குரல் ஓட்டெடுப்பு மூலம் ஏற்கனவே பிரதமருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து விட்டனர். ஒரே ஒரு உறுப்பினர் (மைத்ரேயன்) மட்டுமே ஓட்டெடுப்பை வற்புறுத்துகிறார். இந்த பிரச்சனையை அரசியலாக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என்றார்.
அவரை ஆதரித்து திமுக எம்பி திருச்சி சிவா பேசினார். அவர் கூறுகையில், பிரதமரின் பதில் திருப்தியாக உள்ளது. மிகவும் நுட்பமான இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பினால், எந்த நோக்கத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருகிறோமோ அது பலனளிக்காமல் போய் விடும் என்றார்.
அப்போது சபைக்குத் தலைமை தாங்கிய துணை தலைவர் ரகுமான் கான், ஒரே ஒரு உறுப்பினர் கோரினாலும் ஓட்டெடுப்பு நடத்த மறுக்க முடியாது என்று கூறி, ஓட்டெடுப்புக்கு அனுமதி வழங்கினார்.
இதையடுத்து வாக்கெடுப்பு நடந்தது. ஓட்டெடுப்பின்போது எத்தகைய ஒரு நிலையையும் மேற்கொள்ளாமல் தவிர்ப்பதற்காக, மொத்தம் உள்ள 7 தி.மு.க. உறுப்பினர்களில் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 3 பேர் சபையை விட்டு வெளியே சென்று விட்டனர்.
மேலும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான பிரதமரின் விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி, இடதுசாரி கட்சி எம்பிக்களும் வெளிநடப்பு செய்திருந்ததால் அவையில் மொத்தம் 105 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர்.
அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 6 பேரும் எதிராக 99 பேரும் வாக்களித்ததால், அந்தத் தீர்மானம் படுதோல்வி அடைந்தது.