லேட்டஸ்ட் நிலவரம்.. எதியூரப்பாவை மீண்டும் முதல்வராகப் போகிறதாம் பாஜக!
48 மணி நேரத்தில் மீண்டும் முதல்வராக்க வேண்டும், நான் தான் 21ம் தேதி (இன்று) ரூ. 1 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுவேன், முதல்வர் சதானந்த கெளடா பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது, இல்லாவிட்டால் அரசை கவிழ்ப்பேன், பட்ஜெட் கூட்டத் தொடரில் எனது ஆதரவு எம்எல்ஏக்கள் 70 பேர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறிக் கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன் 2 ஏசி பஸ்களில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பெங்களூர் கோல்டன் பாம் ரிசார்ட்சில் குடியேறினார் எதியூரப்பா.
சொன்னது மாதிரியே பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியபோது எதியூரப்பா கோஷ்டி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. அதே போல ராஜ்யசபா எம்பி தேர்தலில் தனது ஆதரவாளர் புட்டசாமியை போட்டியில் நிறுத்தி கட்சிக்கு அதிர்ச்சியும் தந்தார் எதியூரப்பா. இதையடுத்து புட்டசாமியை கட்சி மேலிடம் நீக்கியது. அவருக்கு ஆதரவாக கையெழுத்து போட்ட 10 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ் வந்தவுடன் 10 பேரும் பல்டி அடித்து போட்ட கையெழுத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இவர்களுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் ஜார்கிஹொலி முதல்வர் சதானந்த கெளடாவை சந்தித்து சமாதானம் செய்து கொண்டுவிட்டார்.
இந் நிலையில் டெல்லிக்கு வாங்க, நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு வாங்க பேசுவோம், பழகுவோம் என்று எதியூரப்பாவுக்கு பாஜக தலைவர் நிதின் கட்காரி பலமுறை எஸ்டிடி செய்தார். அதே போல அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் எதியூரப்பாவுடன் பேசினர்.
ஆனால், நான் எங்கேயும் வர மாட்டேன், நீங்க பெங்களூர் வந்தா பேசுவோம் என்று கூறி வந்த எதியூரப்பா திடீரென நேற்றிரவு அந்தர் பல்டி அடித்தார். அவரது வலதுகரமான அமைச்சர் பசவராஜ் பொம்மை திடீரென ரிசார்ட்டுக்கு வெளியே வந்து அங்கு நின்றிருந்த நிருபர்களிடம், பிரச்சனை தீர்ந்துவிட்டது. நாளை முதல் எதியூரப்பா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்போம். எதியூரப்பாவுக்கும் பாஜக தலைமைக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் win, win situation உருவாகியுள்ளது என்றார்.
இந் நிலையில் நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் ஆலோசனை நடத்திய நிதின் கட்காரி அங்கிருந்து எதியூரப்பாவுக்கு ஒரு போன் போட்டார். இது தான் கடைசி வார்னிங், இரவுக்குள் ரிசார்ட்டை காலி செய்துவிட்டு நாளை சட்டசபைக்கு எம்எல்ஏக்களை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், ஆட்சியே போனாலும் பரவாயில்லை. உங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்தாகத் தெரிகிறது. இதையடுத்தே ரிசார்ட்டை விட்டு கிளம்பினார் எதியூரப்பா என்கிறார்கள்.
இதற்கிடையே பாஜகவுக்கு கெட்ட நேரம் (எதியூரப்பாவுக்கு நல்ல நேரம்), இன்று நடந்த உடுப்பி-சிக்மகளூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அந்தக் கட்சி படுமோசமான தோல்வியை சந்தித்தது.
இது முதல்வராவதற்காக சதானந்த கெளடா ராஜினாமா செய்த இடமாகும். இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரகாஷ் ஹெக்டே சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுனில் குமாரை தோற்கடித்துள்ளார். இந்த சுனில்குமார் சதானந்த கெளடாவின் ஆதரவாளர். இதனால் இந்தத் தொகுதியில் எதியூரப்பா பிரச்சாரமே செய்யவில்லை.
இந்தத் தோல்வி செய்தி எதியூரப்பா கோஷ்டிக்கு இனிப்பான செய்தியாக வந்து சேர, பாஜக தலைமை அதிர்ந்து போய், நேற்று வரை எதியூரப்பாவிடம் காட்டிய மிரட்டல் பாணியை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டது.
எதியூரப்பாவை பகைத்துக் கொண்டால், கர்நாடகத்தில் பாஜகவை யாரும் காப்பாற்ற முடியாது என அந்தக் கட்சியின் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. இதையடுத்து அவருடன் சமாதானப் பேச்சை ஆரம்பித்துள்ளது.
டெல்லிக்கு வாங்க பேசிக்கலாம் என மீண்டும் அழைத்துள்ளனர். டெல்லிக்கு வருவேன்.. ஆனால், திரும்பி வரும்போது முதல்வராகத் தான் வருவேன் என்று எதியூரப்பா கூறியதையும் அமைதியாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலைமை பாஜகவுக்கு.
இதையடுத்து இன்று மாலை டெல்லி செல்லும் எதியூரப்பா தனக்கு அடுத்த 48 மணி நேரத்தில் முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று மீண்டும் கெடு விதிப்பார் என்று தெரிகிறது. அவருக்கு மாநிலக் கட்சித் தலைவர் பதவி தருவதாக பாஜக சொல்லிப் பார்க்கும் என்று தெரிகிறது.
அதை அவர் ஏற்காவிட்டால், அவரையே முதல்வராக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு பாஜக தள்ளப்படலாம்.