இடிந்தகரையில் போலீஸ் மூலம் தாக்குதல் நடத்த அரசு திட்டம்: கொளத்தூர் மணி
திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் இடிந்தகரையில் போலீசார் மூலம் பெரும் தாக்குதல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெரியார் திராவிடர் கழக தலைவருமான கொளத்தூர் மணி கூறியதாவது:
மக்களை அச்சுறுத்தி அணு உலைகளை திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரை இடிந்தகரையில் குவித்துள்ளனர். இடிந்தகரையில் பெரும் தாக்குதலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையை திறக்க கூடாது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கோரிக்கையையும், இடிந்தகரை மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதை
உணர்த்தவும், பாளை ஜவகர் திடலில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதில் மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஆதித் தமிழர் பேரவை அதியமான், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.