மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாமல் தொடர்ந்து கால அவகாசம் கேட்டதையடுத்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தின்போது ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் இதுபோல பணியாற்றி வந்தனர். பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் உள்ளாட்சித் துறையின் கீழ் வருவார்கள்.
தற்காலிகப் பணியாளர்களான அவர்களை அதிமுக அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி இரவோடு இரவாக அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவர்களை உடனே பணியில் சேர்க்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இன்னும் அவர்கள் பணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் முன்னேற்ற சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் வாதாட தலைமை வழக்கறிஞர் ஆஜராகாததால் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் 3வது நாளாக நேற்றும் தலைமை வழக்கறிஞர் வரவில்லை என்று கூறி அரசு கால அவகாசம் கேட்டது.
இதையடுத்து நீதிபதி சுகுணா கூறுகையில்,
வரும் மே மாதம் வரை தான் மக்கள் நலப் பணியாளர்களின் பணி ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்த காலம் முடியும் வரை இப்படி கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பது கண்டனத்திற்குரியது. வரும் 29ம் தேதி எந்தவித காரணமும் கூறாமல் தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்றார்.
தொடர்ந்து வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.