நாடு முழுவதும் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களை நிறுவுகிறது ஆக்சிஸ்
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி நாடுமுழுவதும் 200 பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
தினசரி 24 மணிநேரமும் இந்த இயந்திரம் மூலம் பணம் டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்ய வங்கிகளுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் உடனடியாக வரவு வைக்கப்படும். இதற்கான ரசீது உடனடியாக வாடிக்கையாளர்கள் கையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் அடுத்த 6 மாதங்களுக்கு மேலும் 350 இயந்திரங்களை நிறுவ ஆக்சிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது என்று வங்கி அதிகாரி ஆர்.கே. பாமினி தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தடங்கல் இல்லாத சேவையை வழங்க வங்கி திட்டமிட்டுள்ளதாவம் அவர் தெரிவித்தார்.
2012 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் ஆக்சிஸ் வங்கி நாடுமுழுவதும் 1622 கிளைகளை கொண்டுள்ளது. 9,924 ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இது தவிர சிங்கப்பூர், ஹாங்காங், ஷாங்காய், கொழும்பு, துபாய், அபுதாபி போன்ற நாடுகளிலும் கிளைகள் உள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.