ஒரு வருடத்திற்குள்ளாகவே 3வது எம்.எல்.ஏ மரணம்!
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் கூட முடிவடையாத நிலையில், 3வது எம்.எல்.ஏ. மரணமடைந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபைக்குப் பொதுத் தேர்தல் நடந்தது. அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் மே 16ம் தேதி அமைச்சரவை பதவியேற்றது. அப்போது சிறுபான்மை நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மரியம் பிச்சை நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
அமைச்சர் பதவியேற்ற பிறகு திருச்சி சென்ற அவர் மே 23ம் தேதி சட்டசபை உறுப்பினராக பதவியேற்க கார் மூலம் சென்னை கிளம்பினார். பெரம்பலூர் அருகே அவரது கார் வந்தபோது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மரியம் பிச்சை.
இதையடுத்து காலியான திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிமுகவின் மு.பரஞ்சோதி வெற்றி பெற்றார். ஏற்கனவே மரியம் பிச்சையிடம் தோல்வியைத் தழுவியிருந்த கே.என்.நேரு மீண்டும் தோற்றார்.
சங்கரன்கோவில் கருப்பசாமி
இதேபோல சங்கரன்கோவில் தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆன கருப்பசாமி, புற்றுநோய் காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதி மரணமடைந்தார்.
இதையடுத்து அத்தொகுதிக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துச்செல்வி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து பெரும் வெற்றி பெற்றார்.
புதுக்கோட்டை முத்துக்குமரன்
தற்போது புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர் முதல் முறையாக சட்டசபை உறுப்பினரானவர்.
அதிமுக ஆட்சி அமைந்து தற்போது 10 மாதங்களே ஆகியுள்ளது. ஆனால் அதற்குள் 3 சட்டசபை உறுப்பினர்கள் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications