பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க முடியாது- சட்ட ரீதியாக சந்திப்பேன் : கூடங்குளம் உதயகுமார்
98 வழக்குகள்
கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் உதயகுமார் மீது 98 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அவர் வெளி நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை திரும்ப பெறுவது என்று பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் உதயகுமாருக்கு ஒரு நோட்டீசு அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் தங்கள் மீது 98 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 15 நாட்களில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 30-ந்தேதி இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசை பெற்று கொண்ட உதயகுமார் சட்டப்படி சந்திப்பேன் என்றும், பாஸ்போர்ட் ஒப்படைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உதயகுமார் கூறியுள்ளதாவது:
நான் இந்திய குடிமகன். எனக்கு பாஸ்போர்ட் வைத்து கொள்ள அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் எனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும்படி பாஸ்போர்ட் அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி உள்ளனர். இதனை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கமாட்டேன். நாட்டில் அரசியல்வாதிகள், எம்.பி.க்கள் பலர் மீது ஊழல் மற்றும் குற்றவழக்குகள் உள்ளன. அவர்கள் அனைவரது பாஸ்போர்ட்டுகளையும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் திரும்ப பெற்றுள்ளனவா? எனவே எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு பதிலளித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலத்துக்கு நோட்டீசு அனுப்ப உள்ளேன் என்றார் அவர்.
வெளிநாட்டு பணம் உதயகுமாருக்கு வந்தது குறித்து மத்திய உள்துறை அலுவலக அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்திய நிலையில் உதயகுமாருக்கு பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நோட்டீசு அனுப்பியுள்ள விவகாரம் கூடங்குளத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.