தூத்துக்குடியில் ஜீப் மீது கன்டெய்னர் லாரி மோதி 5 பேர் பலி, 9 பேர் படுகாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஜீப் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் குழந்தைகள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செண்பகதொழுக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் குமரன். நேற்று முன்தினம் அவர் தனது மனைவி ராஜம்மாள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட 14 பேருடன் ஜீப்பில் திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தார். ஜீப்பை அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணி என்ற மணிகண்டன் ஓட்டினார்.
நேற்று திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்துவிட்டு மாலையில் அனைவரும் ஜீப்பில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தூத்துக்குடி சிப்காட் பைபாஸ் ரோ்ட்டில் உள்ளரயில்வே பாலம் பகுதியில் வந்தபோது எதிரே தூத்துக்குடி நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி தறிகெட்டு தாறுமாறான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் டிரைவர் மணிகண்டன் ஜீப்பை ஓரமாக நிறுத்த முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி ஜீப் மீது மோதியது.
இதில் டிரைவர் மணிகண்டன், மாரியப்பன், சிவனாண்டி மனைவி லட்சுமி, மற்றொரு லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். குமரன் அவரது மனைவி ராஜம்மாள், கந்தசாமி மனைவி வெள்ளைத்தாய், மாரியப்பன் மனைவி தனலெட்சுமி, சொக்கர், முத்தையா மற்றும் சித்ரா, சந்திரிகா, ரேணுகா, கார்த்திகேயன் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி ஏடிஎஸ்பி சாமிதுரைவேலு, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் வெள்ளைத்தாய் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த விபத்தால் பைபாஸ் ரோட்டின் இருபுறமும் டிப்பர், டிரெய்லர், கன்டெய்னர் உள்ளிட்ட பல்வேறு சரக்கு வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் கூடலுரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் ராஜசேகரை தேடி வருகின்றனர்.