திருப்பத்தூரில் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ 39 ஆயிரத்தை ஆட்டையை போட்டவர் கைது !
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏ.டி.எம்.மூலம் நூதனமாக திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம்(52) இவர், வியாழக்கிழமை மதியம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு பணம் எடுக்க முடியாததால், வேறு ஏ.டி.எம்.-க்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு நின்ற ஒருவரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்துத்தருமாறு கூறியுள்ளார். அந்த நபர் அந்த கார்டை போட்டு பார்த்து, பணம் இல்லை எனக் கூறி அவரை திருப்பி அனுப்பினார்.
சந்தேகத்தின் பேரில், ஸ்டேட் பாங்க் வங்கி கிளையில் தனது சேமிப்பு கணக்கை பாக்கியம் சோதித்துள்ளார். அதில், ரூ.39 ஆயிரம் குறைவாக இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து திருப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், எஸ்.ஐ. பாஸ்கர், விசாரணை நடத்திய போது, மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த பிரபாகர் மகன் ராஜபிரபு(25) என்பவர் தான் பாக்கியம் ஏ.டி.எம். கார்டை மோசடியாக பெற்று, பாக்கியம் கணக்கில் இருந்த 39 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 35 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் ஏற்கனவே இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மோசடியில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.