மீனவர்கள் குடும்பத்திற்கு இத்தாலி கோடி கொடுத்தது செல்லாது: சுப்ரீம் கோர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மீனவர்களின் குடும்பத்தாருடன் இத்தாலி அரசு செய்த ஒப்பந்தம் இந்திய சட்டப்படி செல்லாது என உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட அஜிஸ் பிங்கோ, ஜெலஸ்டின் ஆகியோரது குடும்பத்தாருக்கு இத்தாலி அரசு கடந்த வாரம் தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடாக அளித்தது. படகின் உரிமையாளருக்கும் ரூ.17 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இத்தாலிய கப்பல் நிறுவனத்தின் சார்பில் கப்பலை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் படகின் உரிமையாளருக்கு இத்தாலி அரசு நஷ்ட ஈடு வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் வழக்குகளை வாபஸ் பெற தீர்மானித்துள்ளனர். எனவே, கப்பலை விடுவிக்க அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு எச்.எல்.கோகலே ஆர்.எம். லோதா ஆகிய நீதிபதிகள் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு கோடி கோடியாக பணத்தை கொடுத்து அவர்களது வாயை அடைத்துவிட்டனர். இது போன்ற கிரிமினல் வழக்கில் சமரச ஒப்பந்தம் ஏற்படுத்த லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எனவே இந்த சமரச ஒப்பந்தம் செல்லாது.
இது இந்திய சட்டத்துக்கு எதிரானதாகும். இது போன்ற நடவடிக்கைகள் இந்திய நீதித்துறையின் மதிப்பை குறைத்துவிடும். இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வழக்கில் அரசுக்கே தெரியாமல் எப்படி சமரச ஒப்பந்தம் ஏற்படுத்த முடியும். எனவே, கேரள அரசு ஒப்பந்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தொடர்ந்து நடக்கிறது.