சைட் டிஷ்ஷுக்கு பணம் கேட்ட டாஸ்மாக் பார் ஊழியர் கொலை: இன்னொருவர் உயிர் ஊசல்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பார் ஊழியர் குத்திக் கொல்லப்பட்டார். இன்னொரு ஊழியர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் பாருக்கு நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் மதுபாட்டில்களுடன் வந்தது. அவர்களுக்கு பார் ஊழியர் வேளாங்கண்ணி(26) தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர்கள், திண்பண்டங்கள் ஆகிவற்றைக் கொடுத்தார். அந்த கும்பல் மது அருந்திவிட்டு இடத்தை காலி செய்ய முயன்றது. அப்போது வேளாங்கண்ணி தான் கொடுத்த பொருட்களுக்கு பணம் கேட்டார்.
பணம் கொடுக்க மறுத்த அந்த கும்பல் அவருடன் தகராறு செய்தது. அப்போது போதை ஆசாமி ஒருவர் எங்ககிட்டேயே பணம் கேட்கிறியா என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேளாங்கண்ணியின் வலது மார்பில் சரமாரியாகக் குத்தினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு ஊழியரான மணிகண்டன் அதை தடுக்க முயன்றார். இதில் அவருக்கு கத்திகுத்து விழுந்தது. உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
படுகாயமடைந்த வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் செங்கல்பட்டைச் சேர்ந்த மண்ணு, விநாயகம், மனோகர் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கொலை நடந்தது தெரியாமல் பலர் அங்கு சென்று மது கேட்டனர். பார் ஊழியர்கள் குடிமகன்களை விரட்டியடித்தனர்.
கொல்லப்பட்ட வேளாங்கண்ணி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, பில்லுமாரி கிராமத்தைச் சேர்ந்தவர். உயிருக்கு போராடும் மணிகண்டன் செங்கல்பட்டு மாவட்டம், விளாங்காோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த புரோக்கர் மூலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அந்த பாரில் வேலைக்கு சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.