மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றதால் விபரீதம்- தேமுதிக எம்.எல்.ஏ. காருக்கு தீ வைப்பு
திருவள்ளூர்: திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியனின் காருக்கு மணல் கடத்தும் மாபியாக்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் பெரியகுப்பம் பாலத்தின் கீழே எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியன் வீடு உள்ளது. இவருக்குச் சொந்தமான நிலம் வரதராஜபுரத்தில் கூவம் ஆறு அருகே உள்ளது.
சிலர் கூவம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டி மூலம் மணல் திருடிச் செல்வதாக தகவல் தெரியவந்தது. இதனால் அந்தப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிய அவர் அங்கு காரில் சென்றார். காரில் எம்.எல்.ஏ. வருவதைக் கண்டு மர்ம நபர்கள் அவரைத் தாக்க முயன்றனர். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடினார் அருண்சுப்பிரமணியன். எம்.எல்.ஏ.வை ஓடவிட்ட கும்பல் அவரது காரை தீ வைத்து எரித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாட்டு வண்டி மூலம் மணல் திருடுவோர்தான் தனது காருக்கு தீ வைத்தனர் என்பது அருண்சுப்பிரமணியனின் புகார்..