குடியரசுத் தலைவர் தேர்தல்- குழப்பியடித்த ரேணுகா சவுத்ரியால் பரபரப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவது குறித்து காங்கிரஸின் ரேணுகா சவுத்ரி மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ரேணுகா கூறியது என்ன?
தலைநகர் டெல்லியில் குடிய்ரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் யாரை முன்னிறுத்தும்? பாஜகவும் மற்ற கட்சிகளும் அவரை ஆதரிக்குமா? என்ற விவாதங்கள் சூடு பறந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரேணுகா சவுத்ரி கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படும்போதேல்லாம் ஆலோசனை கூறவும் அறிக்கை தயாரிக்கவும் பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்க தூது போகவும் எதிர் முகாமுடன் பேசவும் பிரணாப் முகர்ஜியின் அறிவு, அனுபவம், திறமை தேவைப்படுவகிறது. அதனால் அவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தி அவரது சேவையை இழக்க காங்கிரஸ் தயாராக இல்லை என்றார்.
இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக பிரணாப் நிறுத்தப்படமாட்டார் என்பது திட்டவட்டமாகிவிட்டதாகக் கருதிய அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.
பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருந்தும்கூட அந்தப் பதவியை பிரணாப்புக்குத் தரவில்லை.. சரி பரவாயில்லை குடியரசுத் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தோம்..அதுவும் இல்லையா? என அவ்ரது ஆதரவாளர்களும் கொல்கத்தா லாபியும் கொதித்தது.
இந்த கொந்தளிப்பை சமாளிக்க வேண்டிய சங்கடமான நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டது.
மமதா ஆவேசம்
ரேணுகா சவுத்ரியின் பேட்டி காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்ததோ இல்லையோ.. அவரை ஆதரிக்க திட்டமிட்டிருந்த மமதா பானர்ஜியை வெகுண்டெழ வைத்துவிட்டது.
ரேணுகாவின் முதல் பேட்டியைக் கேட்டவுடனேயே, ""பிரணாப் தங்களுடைய வேட்பாளர் அல்ல என்று காங்கிரஸ் இதன் மூலம் அறிவித்துவிட்டதே.. வேறு என்ன நான் சொல்றது' என்று சற்று காட்டமாகவே கண்டனம் தெரிவித்தார்.
ரஷீத் ஆல்வி
நிலைமை மோசமடையவே காங்கிரஸ் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஷீத் ஆல்வி, "காங்கிரஸ் கட்சி தன்னுடைய வேட்பாளர்களை இன்னும் தேர்வு செய்யவில்லை, பிரணாப் முகர்ஜியும் நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது" என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்..
பழிபோட்ட ரேணுகா
ரஷீத் ஆல்வியின் பேட்டியைத் தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா, பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படமாட்டார் என்பதை பல விதங்களில் முன்னதாகக் கூறிய ரேணுகா அதற்காக மன்னிப்பு கோரியதுடன், ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு தகவலைத் திரித்துவிட்டன என்று பழியை அவற்றின்மீது போட்டார்.
வேட்பாளராக யார் நிறுத்தப்பட வேண்டும் என்பதைக் ""கட்சித் தலைமை''தான் தீர்மானிக்க முடியும் என்றும் கூறி எஸ்கேப்பாகிவிட்டார்.
ரேணுகா சவுத்ரி குழப்பியடித்த காரணத்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப்பும் நிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டது.