500 கிலோ கோவில் தங்கத்தை திமுக அரசு திருடியதாக சந்தேகப்படுகிறோம்-அமைச்சர் பரபரப்பு புகார்!

சட்டசபையில் நடந்த தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அவர் பேசுகையில் கூறியதாவது...
கடந்த திமுக ஆட்சியின்போது இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் தங்கம் தொடர்பான பணிகளில் மட்டுமே திமுக அரசு அதிக அக்கறை காட்டியுள்ளது.
பல்வேறு கோவில்களில் இருந்து 500 கிலோ தங்கத்தை அவர்கள் எடுத்துள்ளனர். தங்கத் தேர் செய்வது, தங்க விமானம் அமைப்பது, தங்கக் கொடிக் கம்பம் அமைப்பது என்று கூறி இந்த தங்கத்தை எடுத்துள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன், திருப்போரூர் கந்தசாமி கோவில், அழகர் கோவில் சோலைமலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இப்படி எடுத்துள்ளனர்.
ஆனால் இந்த 500 கிலோ தங்கத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூட திமுக அரசு பயன்படுத்தியிருக்குமா என்று பக்தர்கள் சந்தேகப்படுகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இந்த சந்தேகம் உள்ளது. எனவே திமுக ஆட்சிக்காலத்தில் தங்கம் தொடர்பான பணிகள் என்னென்ன மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை மற்றும் ஆய்வின் முடிவில்தான் திமுக அரசின் மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் என்றார் அவர்.
கோவில் தங்கத்தை திமுக அரசு அபகரித்து விட்டது போல அமைச்சர் புகார் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications