நெல்லையில் 2 ஆண்டுகளில் ரூ.25 கோடி மின் திருட்டு: அதிர்ச்சி தகவல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு மின்திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை நிலவுவதும், அதற்கு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கினால் பற்றாக்குறை தீரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் மின்வாரியத்தினர் தகவல்கள் வெளியிடுவதும் வழக்கம்.
நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2011ம் ஆண்டு டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் எவ்வளவு மின்திருட்டு நடந்துள்ளது, அதற்காக எவ்வளவு அபராதம் செலுத்தியுள்ளனர், அரசுக்கு எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்ற விபரங்களை தகவல் அறியும் ஆணையத்தின் மூலம் பெற்றுள்ளார். பல மாதங்களாக விடாப்பிடியாக பெற்ற தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1, 530 நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மின்திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் 2010ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி இரவில் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 'கொக்கி மூலம்' மின்திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் காட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால் எளிதில் மின்திருட்டு நடக்கிறது. மின்திருட்டு பட்டியலில் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், பொறியியல் கல்லூரிகள் மட்டுமல்லாது வீடுகளிலும் சிலர் மின்திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு 1, 200 பேரின் பெயர் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களுமே குறைந்தபட்சம் 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் என அபராதம் செலுத்தியுள்ளன. நெல்லை தாழையூத்து பகுதியில் செயல்படும் கல்குவாரி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை விட தூத்துத்குடி மாவட்ட தொழிற்சாலைகளில் இன்னும் மோசமான மின்திருட்டு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த அதிமுக பிரமுகரின் ஆலையில் 50 லட்சம் ரூபாய்க்கு மின்திருட்டு நடந்தாலும் அந்த நிறுவனத்தினர் அபராதம் செலுத்தாமலேயே அவர்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 2010, 2011 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான மின்திருட்டு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இத்தகைய தகவல்களை திரட்டிய வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில்,
இந்த தகவல்களை திரட்ட 6 மாதம் ஆகியிருக்கிறது. சில நிறுவனங்களின் பெயர்களை வேண்டுமென்றே மறைக்கும் நோக்குடன் அதிகாரிகள் செயல்பட்டார்கள். சாதாரணமாக மின்சார கட்டணத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டால் மின்துண்டிப்பு, அபராதம் என பொதுமக்களிடம் தங்களது பந்தாவை காட்டும் மின்வாரிய அதிகாரிகள் கோடிக்கணக்கான மின்திருட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு மாவட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 25 கோடி ரூபாய் இழப்பு என்றால் தமிழகம் முழுவதும் மின்திருட்டினால் ஏற்படும் இழப்பு பல்லாயிரம் கோடிகளைத் தொடும் அபாயம் உள்ளது என்றார்.











Click it and Unblock the Notifications