வெட்டி தள்ளுங்க...: சாதி உணர்வை தூண்டிய காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த சித்ரா பெளர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான வன்னியர் சமூக மக்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
வன்னியர் சங்கத் தலைவரும், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு பேசுகையில், தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகளை கடுமையாகத் தாக்கிப் பேசினார். பிராமண சமூகத்தையும் சாடிப் பேசினார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியையும் தாக்கிய அவர் திமுகவின் கலப்புத் திருமண ஆதரவு நிலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
வன்னிய இன பெண்களை கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா.. வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்றேன்.. என்றார்.
இதற்கிடையே குரு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில், குருவின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய டேப்பை பரிசீலனை செய்த மாமல்லபுரம் போலீசார், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சாதி உணர்வை தூண்டுதல், மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக பொது மக்களை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications