தமிழகத்தையே நான்காக பிரித்து ஆண்ட கருணாநிதியின் வாரிசுகள்: ஓ.பி
கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகில் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நகர் மன்றத் தலைவர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது,
கடந்த திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தற்கு ஆளானார்கள். குறிப்பாக அவரது வாரிசுகள் தமிழகத்தையே 4 மாநிலமாக பிரித்து ஆட்சி செய்தனர். இதற்கு முடிவு கட்டவே தமிழக மக்கள் ஜெயலலிதாவை முதல்வர் என்ற அரியணையில் அமர வைத்தனர்.
கடந்த ஓராண்டு காலமாக அதிமுக அரசின் பல்வேறு சாதனைகள் தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிக்கொடி கட்டி பறக்கின்றது. எதிர்காலத்தினரும் பயன்பெறும் வகையில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பான நிர்வாகத் திறமையே காரணம்.
ஜெயலலிதா அறிவித்துள்ள 2023ம் ஆண்டு தொலைநோக்கு திட்டம் என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் ஆசியாவிலேயே முதல் 3 இடத்தில் வரும். மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித நிதியுதவியும் செய்யாத போதிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக்க ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மத்திய அரசும், அப்போதைய முதல்வர் கருணாநிதியும் எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்று தனி ஈழம் அமைக்கப் போவதாக டெசோ என்ற அமைப்பை உருவாக்கி கருணாநிதி நாடகமாடி வருகிறார்.
இந்தியாவில் இருந்து தான் இலங்கைக்கு ஆயுதங்கள் சென்றன. ராணுவ வீரர்கள் சென்றனர். இலங்கையில் ஒரே இடத்தில் 45,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து குரல் கொடுத்ததோடு மட்டும் அல்லாது சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.
23 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. சுதந்திரம் அடைந்த பின்பு வேறு எந்த கட்சிக்கும் கிடைக்காத அறிய சாதனையாகும்.
அதே போல் 1.50 கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம் அதிமுக மட்டுமே. இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.