எங்களுக்கு எம்.பிக்கள் இருக்கிறார்கள், அவர்கள் மூலம் விலையைக் குறைக்க கேட்போம்- கருணாநிதி
பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ந்து போய் நிற்கின்றனர். இதுகுறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் தனது பாணியில் பதிலளித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன? விலையை குறைக்க வலியுறுத்துவீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, எங்கள் கட்சியின் சார்பில், எங்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக இந்த விலை உயர்வு பற்றி எங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறுவோம் என்றார் அவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒரு அங்கம் என்ற வகையில் இந்த விலை உயர்வு பற்றி உங்களிடம் கலந்து பேசினார்களா? என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அரசின் சார்பாக சில முடிவுகளை எடுக்கும்போது, எல்லா பிரச்சினைகளையும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்க இயலாது. உதாரணமாக தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளையெல்லாம் அறிவித்த போது தோழமைக் கட்சிகளையெல்லாம் அழைத்து பேசி ஒப்புதல் பெற்றா அறிவித்தார்? என்று ஜெயலலிதாவை இழுத்துப் பேசினார்.
பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்று கேட்பீர்களா? என்று கேட்டதற்கு, கேட்போம் என்று ஒற்றை வரியில் பதிலளித்தார் கருணாநிதி.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் மூன்றாண்டுகாலமாக இருந்ததே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? என்று இன்னொரு செய்தியாளர் கேட்டபோது, மத்தியில் ஆட்சி செயல்பட்டது அவர்களுக்கு தெரியாமல் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? என்றார் கருணாநிதி.
மொத்தத்தில் இந்த விலை உயர்வை திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் கண்டித்துக் கருத்துக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.