மேட்டூரில் மின் உற்பத்தி தொடக்கம்- நாளை மறுநாள் முதல் 840 மெகாவாட் கிடைக்கும்
சென்னை: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதால் முழு அளவிலான மின் உற்பத்தி நாளை மறுநாள் முதல் கிடைக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தீ விபத்து
கடந்த 10-ந் தேதி அதிகாலை 00.30 அதாவது நள்ளிரவு 12.30 மணியளவில் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி கையாளும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ விபத்து விரைந்து அணைக்கப்பட்டதன் காரணமாக அனல் மின் நிலையத்திற்கு ஏற்படவிருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் சந்திப்பு கோபுரங்கள், நிலக்கரியை சுமந்து செல்லும் கன்வேயர் பெல்ட் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் 180 மீட்டருக்கு முழுவதும் சேதமடைந்து விட்டதால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்த நான்கு அலகுகளும் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீரமைப்பு பணிகள்
தீ விபத்து குறித்த விவரங்களை நான் கடந்த 10-ந் தேதி சட்டமன்றப் பேரவையில் தெரிவித்தேன். மேலும், சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும், அவ்வாறு அதனை சீர் செய்ய சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்றும், எனினும் அந்தப் பணிகள் விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளதையும் சட்டமன்ற பேரவையில் தெரிவித்திருந்தேன். அப்போது ஒரு சில பத்திரிகைகள் இந்த சீர் செய்யும் பணிகளை முடிப்பதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்களாகும் என்ற தங்களது கருத்தை வெளியிட்டிருந்தன. 840 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.
பாதிப்பு என்ன?
இந்த தீ விபத்தில் இரண்டு சந்திப்பு கோபுரங்களுக்கு இடையே இருந்த நிலக்கரி கையாளும் கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்திருந்தது. நிலக்கரியை எடுத்துச் செல்லும் கேலரிகளைத் தாங்கி நிற்கும் அமைப்புகள் மின்சார மற்றும் கட்டுப்பாடு புதை வடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தன. இதனருகில் அமைந்திருந்த தீப்பிழம்பு எண்ணெய் (பர்னஸ் ஆயில்) குழாய் மற்றும் நீராவி எடுத்துச் செல்லும் குழாய்களும் பாதிக்கப்பட்டிருந்தன. 350 டன் அளவிலான இரும்பு கழிவுகளையும் நீக்க வேண்டியிருந்தது. கன்வேயர் கேலரியை 46 மீட்டர் உயர அளவுக்கு தூக்கி வைக்க வேண்டியிருந்தது.
இந்த அளவிலான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள சாதாரணமாக சுமார் 2 மாத காலம் ஆகும் என்றாலும், எனது அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளின் பேரில் இந்தப் பணி விரைந்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் மின்உற்பத்தி
இரும்புக் கழிவுகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் கடந்த 14-ந் தேதி தொடங்கப்பட்டன. மூன்று ஷிப்ட்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இதன் காரணமாக 210 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாம் அலகு இன்று (28-ந் தேதி) அதிகாலை முதல் செயல்படத் துவங்கியுள்ளது. எஞ்சிய மூன்று அலகுகளும் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் தனது முழுத்திறன் அளவான 840 மெகா வாட் மின்சாரத்தையும் மேட்டூர் அனல் மின் நிலையம் உற்பத்தி செய்ய தொடங்கும்.
பாராட்டு
மிகக் கடினமான சீரமைக்கும் பணியில் இரவு பகல் பாராது முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய தமிழ்நாடு மின் வாரியத் தலைவர், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேட்டூர் அனல் மின் நிலையம் மிகக் குறுகியக் காலத்தில் சீரமைக்கப்பட்டுள்ளதால் தீ விபத்தினால் கடந்த 10-ந் தேதி முதல் ஏற்பட்ட 840 மெகாவாட் மின் இழப்பு நீக்கப்பட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் 840 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.