ஜெகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? மனு மீது வியாழக்கிழமை விசாரணை
ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஜாமீன் மனு மீது வரும் வியாழக்கிழமை விசாரணை நடைபெறும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் தம்மை ஜாமீன் விடுவிக்கக் கோரி நேற்று தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தம்மை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ நீதிமன்றம் பதில் மனுத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. க்கு உத்தரவிட்டது. மேலும் இம் மனு மீது வரும் வியாழக்கிழமையன்று விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஆந்திர அமைச்சர் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவரையும் கைது செய்துள்ளது.
இந்நிலையில் ஜெகனின் தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும் வகையில்தான் சி.பி.ஐ. அவரை கைது செய்திருக்கிறது என்றும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.