மும்பை தாக்குதலில் சயீத்தைவிட லக்விக்குத்தான் தொடர்பு உண்டு: பாகிஸ்தான் ஒப்புதல்
பாகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற இருநாட்டு உள்துறை செயலாளர்களிடையேயான மாநாட்டில் மும்பை தாக்குதல் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது மும்பை தாக்குதலில் லக்விக்கு நேரடியாக தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு திரட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
லக்விதான் தாக்குதலுக்கான திட்டம் வகுத்தது, படகு ஏற்பாடு செய்தது, பணம் ஏற்பாடு செய்தது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மும்பை தாக்குதலில் தொடர்புடைய லக்வி உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான ஆதாரங்களை அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் பாகிஸ்தானிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் லக்வியின் தலை உருட்டப்பட்டுள்ளது. சயீத்தின் தொடர்பு பற்றி மும்பை சிறையில் உள்ள அஜ்மல் கசாப் கூடுதல் தகவல்களைத் தெரிவித்திருக்கின்ற போதும் பாகிஸ்தானோ சயீத்துக்கு தொடர்பில்லை லக்விதான் காரணம் என்பதாக கூறி வருகிறது.
லக்வியின் தலையை உருட்டும் நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய இரு பாகிஸ்தானிய அதிகாரிகளை நிச்சயமாக அந்நாடு காப்பாற்றவே முனையும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் நடைபெற்ற இருநாட்டு உளதுறைச் செயலர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் சிறையில் நீண்டகாலமாக இருந்தும் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் உறுதியளித்திருக்கிறது.