இலங்கை அரசு உள்நோக்கத்துடனேயே பாரதியார் விழா நடத்துகிறது: தமிழ் ஆர்வலர்கள்
சென்னை: இலங்கை அரசு ஏதோ உள்நோக்கத்துடன் தான் பாரதியார் விழாவை நடத்தவிருக்கிறது என்று தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு சார்பாக கொழும்பில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி பாரதியார் விழா நடத்தப்படுகிறது. ’தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டு பிரமுகர்கள் இலங்கை செல்ல உள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் நடைபெறும் விழாவில் தமிழக பிரமுகர்கள் பங்கேற்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அப்பாவி தமிழ் மக்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழ் கவிஞரான பாரதியாருக்கு விழா நடத்துவதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது எனவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை செல்ல உள்ள தமிழக பிரமுகர்களின் வீடுளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தமிழ் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.