முல்லைப் பெரியாறு அணையில் துளைகள் அடைக்கும் பணி இன்று முதல் துவக்கம்
குமுளி: ஆய்வுக்காக மண் மாதிரி எடுக்க முல்லைப் பெரியாறு அணையில் போடப்பட்ட துளைகளை அடைக்கும் பணி இன்று முதல் துவங்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு அணையில் துளையிட்டு மண் மாதிரி எடுத்து. பரிசோதனையில் அணை பலமாக உள்ளதாகவும், அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும் அந்த குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் அவர்கள் போட்ட துளைகளை அடைக்க அந்த குழு உத்தரவிட்டது.
துளைகளை அடைக்க தமிழக பொறியாளர்கள் முயன்ற போது அவர்களை கேரள போலீசார் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பருவ மழை துவங்கும் முன்பு துளைகளை அடைக்காவிட்டால் மழை நீர் தேங்கி அணை பலவீனமாகும் என்று தமிழக பொறியாளர்கள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த விவகார்ம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, முல்லைப் பெரியாறு அணையில் போடப்பட்டுள்ள துளைகளை அடைக்கும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபடுவதைத் தடுக்கக் கூடாது என கேரள அரசை தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.
கேரளம் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டு வந்தாலோ, அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்கிற எனது கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்தாலோ அணையின் பாதுகாப்புக்கு தமிழக போலீஸாரை ஈடுபடுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று காலை துளைகளை அடைக்க தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்,பொறியாளர்கள் சென்றுபோது வழக்கம்போல கேரள போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதற்கு தமிழக அதிகாரிகள் துளைகளை மூட கேரள அரசு விதித்த தடை உத்தரவை காட்டுங்கள் இல்லையென்றால் நாங்கள் எங்கள் பணியைச் செய்வோம் என்று கூறினர்.
உடனே கேரள போலீசாரும், நீர்பாசனத்துறை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர். அப்போது தமிழக முதல்வர் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் குறித்து விவாதித்த கேரள அதிகாரிகள் துளைகளை அடைக்கவிடாமல் தடுக்கும் முடிவை கைவிட்டனர்.
இதையடுத்து தமிழக அதிகாரிகள் துளைகளை எப்படி அடைப்பது என்பது குறித்த முதற்கட்ட ஆய்வுப்பணியை நேற்று தொடங்கினர். இந்நிலையில் துளைகளை அடைக்கும் பணிகள் இன்று முதல் துவங்கும் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.