கத்தார் வணிக வளாகத்தில் தீவிபத்து: 13 குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் பலி
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 13 பேர் குழந்தைகள் என்று அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் பிரசித்த பெற்ற வில்லாகியோ என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் திங்கட்கிழமை நள்ளிரவு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் சிக்கி 13 குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 7 பெண் குழந்தைகள், 6 பேர் ஆண்குழந்தைகள் என்றும் ஏராளமானோர் தீ விபத்தினால் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்தில் சிக்கிய குழந்தைகளில் 4 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது அவசர வழியின் கதவு வெளியேற முடியாத வகையில் பூட்டப்பட்டிருந்ததாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அதன் காரணமாகவே ஏராளமான குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் வில்லாகியோ வணிக வளாகத்தின் உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 4 ஆசிரியர்களும், மேலும் இருவரும் உயிரிழந்து விட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், முதல் தளமான குழந்தைகள் பாதுகாப்பு தளத்தில் தீ பற்றியதாக தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியதாக கூறியுள்ளனர்.
தீ விபத்து குறித்து முழுமையான அளவில் விசாரணை நடத்தப்படும் என்று அல்ஜசீரா தொலைக்காட்சியில் பேசிய கத்தார் உள்துறை இணை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் நசீர் அல் தானி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications